Ads (728x90)

உங்கள் விலைமதிப்பற்ற நம்பிக்கையைப் பாதுகாப்போம். அது நாம் விரும்பியே ஏற்றுள்ள பொறுப்பாகும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.

வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விசேட ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கும்  நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இயற்கை அனர்த்தங்கள் மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில், புதிய உயிரைச் சுமக்கும் தாய்மார்களுக்கு இந்த 5,000 ரூபா ஊட்டச்சத்து கொடுப்பனவு அர்த்தமுள்ளதாகவும், ஆறுதலாகவும் அமையும். இத்திட்டம் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு 2025 நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் தாய் சேய் நல சிகிச்சை நிலையங்களில் பதிவு செய்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், நான்கு மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகளைக் கொண்ட தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கும் இந்த நிதியுதவி ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் கொடுப்பனவாக வழங்கப்படும்.

சவால்கள் எவ்வளவு கடினமானவையாக இருந்தாலும், தாய்மார்களதும், குழந்தைகளதும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக முதலீடு செய்யவும் எமது அரசாங்கம் உறுதியுடன் உள்ளது என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget