Ads (728x90)

இலங்கையைத் தாக்கிய 'தித்வா' புயல் தாக்கம் காரணமாக கட்டிடங்கள், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடிச் சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. 

இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4 சதவீதமாகும் என உலக வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. 

இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் அழிவுகரமான இந்தப் புயலினால் 25 மாவட்டங்களிலும் உள்ள சுமார் 2 மில்லியன் மக்களும், 5 இலட்சம் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மத்திய மாகாணமே அதிக பாதிப்புக்குள்ளானதுடன் அங்கு கண்டி மாவட்டத்தில் மட்டும் சுமார் 689 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

வீதிகள், பாலங்கள், புகையிரதப் பாதைகள் மற்றும் நீர் வழங்கல் வலையமைப்புகள் என உட்கட்டமைப்புக்கு மட்டும் 1.735 பில்லியன் டொலர் (மொத்த சேதத்தில் 42%) இழப்பு ஏற்பட்டுள்ளது. 

குடியிருப்புகள் மற்றும் வீட்டு உபகரணங்களுக்கு சுமார் 985 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. 

நெல், மரக்கறி பயிர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத் துறைக்கு 814 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. இது உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 

அத்துடன் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட பொதுக் கட்டிடங்களுக்கு 562 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. 

வறுமை மற்றும் காலநிலை அபாயங்கள் காரணமாக பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இந்த அனர்த்தத்தினால் மீண்டெழுவதில் அதிக சவால்களை எதிர்கொள்வதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் போன்ற அத்தியாவசிய சேவைகளை மீளமைக்க, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களில் இருந்து 120 மில்லியன் டொலர்களை உலக வங்கி அவசரமாக ஒதுக்கியுள்ளது. 

நிவாரணப் பணிகளைத் தாண்டி, எதிர்காலக் கட்டுமானங்களில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய வலுவான வடிவமைப்புகளைப் பின்பற்றுவது அவசியம் என அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. 

இந்த மதிப்பீட்டைப் பூர்த்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் காட்டிய தலைமைத்துவத்தை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. 

வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், திறைசேரி, தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் நெருக்கமான ஒத்துழைப்புடன் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, உலக வங்கியின் Global Rapid Post-Disaster Damage Estimation (GRADE) அணுகுமுறையானது, அனர்த்தங்களுக்குப் பின்னர் முடிவெடுப்பதற்குத் தேவையான ஆதார அடிப்படையிலான மதிப்பீடுகளை சரியான நேரத்தில் வழங்குவதன் மூலம் 54 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஆதரவளித்துள்ளது. 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget