தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான பிரதான நினைவு தினம் இன்று காலை காலி, பெரலிய ஆழிப்பேரலை நினைவுத் தூபிக்கு முன்பாக நடைபெற்றது.
இதன்படி இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை உயிரிழந்தவர்களின் நினைவாக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதேச வாசிகள் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றன.
சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது.
இதனால் இலங்கையில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போயினர். மேலும் பெருமளவிலான சொத்துக்களும் அழிவடைந்தன.
சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் 2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதி 'தேசிய பாதுகாப்பு தினமாக' பெயரிடப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Post a Comment