Ads (728x90)

நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்ந்து அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் நேற்று காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 

தித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து வீதிகள் மற்றும் அவற்றை புனரமைக்க எடுக்கும் காலம் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. 

சாதாரண பழுதுபார்ப்பு மேற்கொண்டு திறக்க முடியாத வீதிகள் குறித்து அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, இது தொடர்பாக அறிக்கையை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரினார். 

நுவரெலியா மாவட்டத்தில் சில வீதிகள் மற்றும் பாலங்களை அமைக்கும் போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகளை கவனத்திற் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். 

அதன்படி நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த வீதிகள், வடிகால்வாய்கள் மற்றும் பாதுகாப்பு மதில் சுவர்களை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து புனரமைப்பு நடவடிக்கைகளையும் நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget