Ads (728x90)

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில், வடக்கு மாகாணத்தின் பன்முக பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்தும் பண்பாட்டுப் பெருவிழாவும், பாரம்பரியக் கண்காட்சியும் நேற்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வடக்கு மாகாணம் என்பது பல இனங்களும், பல மதங்களும், பல மொழிகளும் இணைந்து வாழும் மண்ணாகும். அந்த ஒற்றுமையும் பன்முகத்தன்மையும் ஒரே மேடையில் கலை வழியாக வெளிப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இன்றைய பண்பாட்டுப் பெருவிழா அமைந்தது.

தமிழ் மக்களின் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லும் வாள் நடனம், கரகாட்டம் என்பவற்றுடன், எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலய மாணவிகளின் இஸ்லாமிய ‘ஹசீதா’ கலை வடிவமும், வவுனியா தெற்கு துஸ்யந்த கலைமன்றத்தின் சிங்கள ‘கண்டிய நடனமும்’ஒரே மேடையில் அரங்கேற்றப்பட்டமை, கலைக்கு இன, மத எல்லைகள் இல்லை என்பதை உறுதியாக உணர்த்தியது. 

பாரம்பரிய முறைப்படி விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, வடக்கு மாகாணத்தின் பண்பாட்டு வரலாற்றை பிரதிபலிக்கும் பழமையான பொருட்கள், கலைஞர்களின் ஓவியங்கள், பாரம்பரிய நூல்கள் அடங்கிய கண்காட்சிக் கூடம் திறந்து வைக்கப்பட்டது. இக்கண்காட்சி, நமது மரபுகளை எதிர்கால தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை நினைவூட்டும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது.

இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் கூட்டுறவுத்துறைப் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். அதேபோல், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பெருந்திரளான கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று, நிகழ்வுக்கு பெருமை சேர்த்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget