இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தற்போது நிலவுகின்ற பாதுகாப்பு, பொருளாதாரம், கடல்சார் மற்றும் பிராந்திய கூட்டாண்மை குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவை பரஸ்பரம் நன்மைகளை அடையும் வகையில் மேலும் பலப்படுத்திக் கொள்வது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கை தற்பொழுது தொடங்கியுள்ள தேசிய செயற்பாடு குறித்தும், இந்து சமுத்திரமானது போதைப்பொருள் கடத்தலுக்கான மையமாக மாறியுள்ளதால் இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்திற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.இந்த சந்தர்ப்பத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாக மூன்று புதிய ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொள்வதிலும், இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் குருநாகல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மூன்று பெய்லி பாலங்களை மக்களின் பாவனைக்காக திறந்து வைப்பது தொடர்பிலும் ஜனாதிபதி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
நாளை வரை இலங்கையில் தங்கியிருக்கும் ராஜ்நாத் சிங், தனது விஜயத்தின் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா மற்றும் உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும்.



Post a Comment