வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்கொரிய ராணுவம் கூறும்போது, "வடகொரியா இன்று (செவ்வாய்க்கிழமை) ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இந்த சோதனை வடகொரியாவின் புயோகான் மாகாணத்திலிருந்து நடத்தப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
ஜப்பானின் பொருளாதார மையப்பகுதியாக செயல்படும் கிழக்கு கடற்பகுதியில் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளதாக ஜப்பான் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை அமெரிக்காவின் அலஸ்கா மாகாணம்வரை சென்று தாக்க கூடியது என்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ர்ம்ப், "வடகொரியா மற்றுமொரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. வடகொரிய அதிபர் தன் வாழ்க்கையில் இதைவிட சிறப்பான ஒன்றை செய்ய முடியுமா?
தென் கொரியாவை இந்த விவகாரத்தில் நம்புவது கடினம். ஜப்பான் வடகொரியவை எதிர் கொள்ள நீண்ட காலம் போராட வேண்டும். ஒருவேளை சீனா இதில் நடவடிக்கை எடுத்தால் வடகொரியாவின் முட்டாள்தனம் முடிவுக்கு வரும்" என்று பதிவிட்டுள்ளார்.
வடகொரியா, அடிக்கடி ஏவுகணை சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் அந்நாட்டின் மீது ஐ.நா. பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்திருக்கிறது. அமெரிக்காவும் அவ்வப்போது வடகொரியாவுக்கு எச்சரிக்கைகளை விடுத்துவருகிறது.
ஆனால் ஐ.நா., அமெரிக்கா, சீனா இன்னும் பிற நாடுகளின் எதிர்ப்பையும் தாண்டி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருக்கிறது.

Post a Comment