இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலக மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த 2015ஆம் ஆண்டு சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றன. அதன்பிறகு இவ்வாண்டுக்கான போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பை லண்டன் பெற்றுக்கொண்டது.
அதன்படி இன்று ஆரம்பமாகும் போட்டிகள் எதிர்வரும் 13ஆம் திகதிவரை 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடைபெற்ற லண்டன் ஸ்டவர்ட் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
200 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ள லண்டன் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரின் ஏற்பாட்டுக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள அடைவு மட்டத்தின்படி மரதன் போட்டிகளுக்காக இலங்கை சார்பாக அநுராத இந்திரஜித் குரே மற்றும் ஹிருணி விஜேரத்ன ஆகியோர் ஏற்கனவே நேரடியாகத் தகுதிபெற்றுக்கொண்டனர்.
அத்துடன் இந்தியாவின் புவனேஷ்வரில் இம்மாத முற்ப குதியில் நடைபெற்ற 22ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டித் தொடரில் இலங்கைக்காக ஒரேயொரு தங்கப் பதக்கத்தினை வென்று கொடுத்த நிமாலி லியனாரச்சி (800 மீற்றர் ஓட்டம்) உலக மெய்வல்லுநர் போட்டிகளுக்கான அடைவுமட்டத்தை பூர்த்தி செய்யாத போதிலும், ஆசியாவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதால் குறித்த போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, ஈட்டி எறிதல் வீரர் வருண லக் ஷான் தயாரத்ன குறித்த போட்டிக்கான தரப்படுத்தலில் 29ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதால் பெரும்பாலும் அவருக்கும் இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பொதுவாக உலக மெய்வல்லுநர் போட்டிகளுக்கான உலக தரப்படுத்தலில் முதல் 32 இடங்களில் உள்ள வீரர்களுக்கு முதல் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டும்.
அதன்படி வருண லக் ஷான்
இதில் பங்கேற்பது தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. குறித்த அறிவிப்புக்கு அமைய இலங்கையின் நான்காவது வீரராக அவரும் லண்டன் பயணமாகவுள்ளார்.
இந்தப் போட்டித் தொடருடன் உலகின் அதிவேக ஓட்ட வீரரான உசைன் போல்ட் மற்றும் மரதன் சம்பியனான மோ பரா ஆகியோர் தமது ஓய்வை அறிவிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment