
மேற்காசிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா தலைநகர், ரியாத்தில், நவீனத்துவ மாநாடு, சமீபத்தில் நடந்தது.
இம்மாநாட்டின்போது, 'ஹியுமனாய்டு ரோபோ' எனப்படும், மனிதனை போன்று செயல்படும் ரோபோ ஒன்றிற்கு, சவுதி அரேபியா நாட்டு குடியுரிமை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோபோவுக்கு, குடியுரிமை வழங்கிய முதல் நாடு என்ற பெருமை, சவுதி அரேபியாவிற்கு கிடைத்துள்ளது.
குடியுரிமை பெற்றுள்ள சோபியா என அழைக்கப்படும் ரோபோ, ஹாங்காங்கைச் சேர்ந்த, ஹான்சன் ரோபோடிக்ஸ் என்ற நிறுவனத்தால், 2015ல் தயாரிக்கப்பட்டது.
இந்த ரோபோவை கண்டுபிடித்த, டேவிட் ஹான்சன் கூறுகையில், ''நாங்கள் தயாரித்துள்ள ரோபோவிற்கு, செயற்கை நுண்ணறிவு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மனித முகங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். ரோபோவின் சிலிகான் முகம், 62 வகையான, மனித முக பாவங்களை வெளிப்படுத்த முடியும்,'' என்றார்.
ரோபோ சோபியா, ஆச்சரியப்படும் வகையில் அளித்த பேட்டி ஒன்றில், ''எனக்கு குடியுரிமை அளித்த, சவுதி அரேபியாவிற்கு நன்றி. தனித்துவம் வாய்ந்த இந்த கவுரவத்தால், பெருமைப்படுகிறேன். குடியுரிமை வழங்கப்பட்ட முதல் ரோபோ என்ற கவுரவம், வரலாற்று சிறப்பு வாய்ந்தது,'' என, கூறியுள்ளது.
Post a Comment