ஜப்பான் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ஷின்சோ அபேயின் லிபரல் டெமாக்ரடிக் கட்சி வெற்றி பெற்றது.இதன் மூலம் ஜப்பானின் பிரதமராக ஷின்சோ அபே மீண்டும் பதவி ஏற்கவுள்ளார்.
வடகொரியா பிரச்சினை, எதிர்க்கட்சிகள் உடனான மோதல், ஊழல் குற்றச்சாட்டு ஆகிய காரணங்களால் பிரதமரின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு ஆண்டுகாலம் இருந்தும் முன் கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று ஷின்சோ அபே அறிவித்தார்.
இதன்படி ஜப்பானில் நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் மொத்தமுள்ள 465 இடங்களுக்கு 1,200 பேர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் லிபரல் டெமாக்ரடிக் கட்சி மொத்தமுள்ள 465 இடங்களில் 311 இடங்களில் வெற்றிப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
நாடாளுமன்றப் பொது தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து ஷின்சோ அபே கூறும்போது, "நான் தேர்தலில் வாக்களித்தப்படி வடகொரியா மீது நடவடிக்கை எடுக்கும் எனது பணியை உடனடியாகத் தொடங்குவேன் "என்றார்.
ஷின்சோ அபே ஜப்பானின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகள் நடத்தி கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை உருவாக்கிவரும் வடகொரியாவின் மீது உறுதியான நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Post a Comment