
இலங்கைக்குள் நம்பகரமான மற்றும் சுயாதீனமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டாவிடின் சர்வதேச மட்டத்தில் நீதியை தேடுவதற்கான முயற்சிகள் மிகவும் வலுவான முறையில் இடம்பெறும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்று இலங்கை்கான விஜயத்தை முன்னெடுத்த உண்மை, நீதி, நட்டஈடு,மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் தெரிவித்தார்.
இதற்கு சிறந்த உதாரணமாக பிரேஸில் நாட்டில் அண்மையில் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை குறிப்பிடலாம். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடர்ந்தும் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது. அதனை நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும். யுத்த வெற்றிவீரர்களை இவ்வாறு பாதுகாப்பதாக கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை மீறுவதைப் போன்றதாகும் என்றும் ஐ.நா. பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.
பொறுப்புக்கூறல் பொறிமுறையை தொடர்ந்தும் தாமதமாக்கவேண்டாம். இவ்வாறு தொடர்ந்தும் இந்த செயற்பாட்டை தாமதமாக்குவது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைந்திருக்கின்றது. எனவே அரசாங்கம் உடனடியாக நம்பகரமான பரந்துபட்ட சுயாதீனமான வெளிப்படைத் தன்மைமிக்க அனைவரும் பங்கேற்கக்கூடிய பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்வைக்கவேண்டுமென வலியுறுத்துகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பான விடயத்தை அரசாங்கம் உடனடியாக மீளாய்வு செய்யவேண்டும். அத்துடன் வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைக்கவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் நீக்கவேண்டும் என்றும் ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு 14 நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்ட உண்மை, நீதி, நட்டஈடு,மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் நேற்று தனது இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்கு முன்பதாக கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து தனது மதிப்பீடுகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தபோதே மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.
Post a Comment