இல்லாத அரசியலமைப்பு குறித்து பொய்யான கருத்துக்களை பரப்ப வேண்டாம். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் உண்மைகளை தெரிந்துகொண்டு விமர்சிக்க வேண்டும். நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய நிலையில் மக்களை குழப்ப வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.கடந்த ஆண்டு ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
நாட்டில் அனர்த்தங்களில் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க விரைவான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். நாம் இன்றும் நவீன வசதிகளை பயன்படுத்தாததன் காரணமே இழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் அதிகளவில் முகங்கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. எனினும் அனர்த்தங்கள் குறித்து மாற்று வேலைத்திட்டங்களை வெகு விரைவில் நாம் முன்னெடுப்போம். மக்களை பாதுகாக்கும் தரமான வேலைத்திட்டங்களை நாம் சர்வதேச நாடுகளுடன் இணைந்து முன்னெடுப்போம்.
கடந்த ஆண்டில் அனர்த்தத்தில் மாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவே நாம் 1.3 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளோம். அதன் ஒருகட்டமாக இப்போது தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு நாம் நிதி உதவிகளை வழங்குகின்றோம். இந்த ஆண்டு இறுதிக்குள் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் நாம் நிவாரணங்களை வழங்கி மக்களின் நிலைமைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.
சர்வதேச நாடுகளின் மூலமாவோ சர்வதேச வங்களின் மூலமாகவும் நாம் கடன்களையும், உதவிகளையும் பெற்று இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
சர்வதேச நாடுகளில் இவ்வாறான நிலைமைகளில் எல்லாம் ஊடகங்கள் அனர்த்தங்கள் குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பிேலயே அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கின்றன. எனினும் இன்று எமது நாட்டில் அதிகளவில் அரசியலமைப்பு குறித்து மட்டுமே அனைத்து ஊடகங்களும் பேசுகின்றன. நாம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களை நாட்டினை பிளவுபடுத்த போவதாக ஊடகங்கள் கூறுகின்றன. மாநாயக தேரர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையிலும் ஊடகங்கள் கருத்துக்களை முன்வைத்து நாட்டின் நல்லிணக்கத்தை சிதைவடையச்செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
உருவாக்கப்படாத ஒரு அரசியலமைப்பு குறித்து பொய்யான கருத்துக்களை பரப்ப வேண்டாம். இன்னும் அரசியல் அமைப்பின் ஆரம்ப நடவடிக்கையேனும் முன்னெடுக்காத நிலையில் இல்லாத அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதாகவும் அது மோசமான ஒன்றாகவும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. இப்போது அரசியலமைப்பு குறித்து கருத்துக்கள் முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
பாரளுமன்றத்தில் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டு இந்த விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. நாட்டிற்கு பொருத்தமான, பொருளாதரத்தை கட்டியெழுப்பக்கூடிய, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகளை பெற்றுகொள்ளக்கூடிய வகையிலான அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்தே இன்றும் நாம் பாராளுமன்றத்தில் கலந்தாலோசித்து அதில் உள்ள முரண்பாடுகளை ஆராய்ந்து தீர்மானம் எடுத்து வருகின்றோம்.
புதிய அரசியலமைப்பு குறித்து தத்தமது கட்சிகளின் கருத்துக்களை முன்வைத்து விவாதம் செய்யவும் நாம் சகல அரசியல் கட்சிகளுக்கும் வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். இதனை சரியான வாய்ப்பாக பயன்படுத்தி கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டும். நாம் அரசியலமைப்பினை உருவாக்கும் போது அது குறித்த சரியான தெளிவினை பெற்றுக்கொண்டு அதன் பின்னர் அரசியலமைப்பு குறித்து விமர்சனங்களை முன் வைக்க வேண்டும். அதற்கான காலம் இதுவல்ல. சகலரும் தமது நிலைப்பாடுகளை, காரணிகளை, ஆலோசனைகளை, பிரேரணைகளை முன்வைக்க சரியான காலம் கிடைக்கும், அனைவரதும் இணக்கத்தில் பொதுவான ஒரு அரசியலமைப்பு உருவாக்க முடியும்.
நாம் அரசியலமைப்பு குறித்த நிலைபாட்டினை முன்வைத்த பின்னர் அதில் முரண்பாடுகள் இருக்குமாயின் அவற்றை வைத்துகொண்டு எம்மீதான விமர்சனங்களை முன்வையுங்கள். ஆனால் உருவாக்கப்படாத ஒரு விடயம் குறித்து பொய்யான தகவல்களின் பிரகாரம் இவ்வாறு அரசாங்கத்தை குழப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம்.
மக்களை ஒன்றிணைக்கவும் நாட்டினை கட்டியெழுப்பவும் பல வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அவற்றினை சரிசெய்ய வேண்டும். அவ்வாறு இருக்கையில் தேவையற்ற கருத்துக்களை முன்வைத்து மக்களை குழப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment