
இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 9–ம் தேதியும் குஜராத்தில் டிசம்பர் 9, 14 ஆகிய தேதிகளிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் பிரச்சாரகராக கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளார். இந்நிலையில் அவர் தற்போது தலைவர் பதவியை ஏற்றால் கட்சியினரின் கவனம் சிதறும் எனவும், அது தேர்தலில் வெற்றியை பாதிக்கும் என்றும் கட்சித் தலைமை கருதுகிறது.
மேலும் இரு மாநிலங்களில் ஒருவேளை வெற்றி பெற்ற பின் ராகுல் பதவியேற்றால் மக்களவை தேர்தலுக்கு அவரை பிரதமர் வேட்பாளராக முன்கூட்டியே அறிவிக்கலாம் என கட்சி கருதுகிறது. எனவே இந்திரா காந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19 அன்று திட்டமிடப்பட்டிருந்த கட்சியின் தேர்தலை காங்கிரஸ் தள்ளி வைத்து விட்டது.
இது குறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது, “கட்சித் தேர்தலில் ராகுலை எதிர்த்து யாரேனும் மனுச்செய்து விட்டால், அதன் தாக்கம் சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலிக்கும். இரு மாநிலங்களும் காங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதால் பதவியேற்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட தினமான டிசம்பர் 29-ல் பதவியேற்பு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.
தலைமை பதவியின் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நடைமுறைகள் அக்டோபர் 31-ம் தேதியுடன் முடிவடைகின்றன. அதேசமயம், அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகமும் கட்சியின் தேசியத் தலைமைக்கு ராகுல் பெயரை பரிந்துரைத்து விட்டன
Post a Comment