சபரிமலையில் டிச. 26ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி டிச. 22-ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி பவனி புறப்படுகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து 41 நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவு பூஜைதான் மண்டலபூஜை.இந்த நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டலபூஜை நாளிலும் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும்.
பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது. டிச. 22-ம் தேதி காலை ஆறு மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து இந்த பவனி பலத்த பாதுகாப்புடன் புறப்படுகிறது.
22-ம் தேதி ஓமல்லுார் பகவதி கோயில் 23-ம் தேதி கோந்நி முருங்கமங்கலம் கோயில், 24-ம் தேதி பெருநாடு சாஸ்தா கோயில்களில் தங்கும் இந்த பவனி டிச. 25ம் தேதி மதியம் பம்பை வந்தடையும். பம்பை கணபதி கோயில் அருகே பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும் இந்த அங்கி மாலை 3:00 மூன்று மணிக்கு தலைச்சுமடாக சன்னி தானத்துக்கு கொண்டு வரப்படும். டிச.25 மாலை 6:30 மணிக்கு தங்க அங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும்.
26ம் தேதி மண்டலபூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும்.
Post a Comment