
ஓதுவார் குடும்பத்தை சேர்ந்த நான் இளஞ்சி குமாரர் கோயிலில் ஓதுவாராக பணியாற்றி வருகிறேன். திராவிட வேதங்களான தேவாரம் மற்றும் திருவாசகத்தை கோயிலில் பாடி வருகிறேன். கோயில்களில் ஓதுவார்களாக பணியாற்றுவோரின் சம்பளத்தை வரைமுறைப்படுத்தி கடந்த 2004ல் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை 1997 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் எனக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது.
இதனால், அரசாணைப்படி சம்பளத்தை உயர்த்த மனு அளித்தேன். 2010-ல் மாதச்சம்பளம் ரூ.9900 ஆக உயர்த்தப்பட்டது. இது அரசாணைப்படியான சம்பளம் இல்லை. என்னைப் போன்ற ஓதுவார்கள் கோயில்களில் தேவாரம், திருவாசகம் பாடுகின்றனர். இதன்மூலம் தமிழ் கலாச்சாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்படுகிறது. அரசாணைப்படி சம்பளத்தை கணக்கிட்டால் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக எனக்கு வழங்க வேண்டியிருக்கும். இது தொடர்பாக நான் அளித்த மனுவை அறநிலையத்துறை ஆணையர் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். இதை ரத்து செய்து அரசாணைப்படி சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது. மனுதாரரைப் போல வேறு ஓதுவார்கள் யாராவது குறைந்த சம்பளம் வாங்குகிறார்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு மனுதாரர் வழக்கறிஞர், ஓதுவார்களுக்கு பல நிலைகளில் சம்பளம் வழங்கப் படுகிறது. பழநி, திருச்செந்தூர் கோயில் ஓதுவார்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்றார்.
இதையடுத்து, ஓதுவார்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிறிய கோயில், பெரிய கோயில் என பார்க்கக்கூடாது. அனைத்து கோயில் ஓதுவார்களையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
அரசு வழக்கறிஞர், கோயில் வருமானத்தின் அடிப்படையில்தான் சம்பளம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என்றார்.
அதற்கு நீதிபதி, ஒரு காலத்தில் ஓதுவார்கள் இல்லாமல் எந்த கோயில் திருவிழாவும் நடக்காது. தற்போது பல கோயில்களில் ஓதுவார்களே இல்லை. ஓதுவார்களின் நிலையை பரிவுடன் கவனிக்க வேண்டியது அரசின் கடமை. ஏனெனில் அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. குறைவான சம்பளத்தை வைத்து எப்படி சமாளிப்பார்கள். ஓதுவார்களை பாதுகாத்தால் தான் தேவாரத்தையும், திருவாசகத்தையும் பாதுகாக்க முடியும். அப்போது நமது பாரம்பரியமும், கலாச்சாரமும் பாதுகாக்கப்படும் என்றார் நீதிபதி.
இந்த வழக்கில் நீதிபதி ஆர்.மகாதேவன் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கினார். அதில்
ஓதுவார்களுக்கு சம்பள விகிதத்தை 6 வாரத்தில் மாற்றியமைக்க வேண்டும். அவர்களுக்கு பிற அரசு வழங்கப்படுவது போல் ஊதியம் வழங்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்
Post a Comment