2018ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு நியதிச்சட்டம் (வரவு செலவுத் திட்டம்) மாகாண சபையின் நேற்றைய அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.இந்த நியதிச் சட்ட அறிக்கையை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த 5ஆம் திகதி மாகாண சபை அமர்வில் முன்மொழிந்தார்.
அடுத்தாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஒவ்வொரு அமைச்சுகள் மீதான விவாதங்களும் மூன்று தினங்கள் இடம்பெற்று நேற்றுடன் நிறைவடைந்தது.
மாகாண எதிர்க்கட்சித் தலைவர் வழிமொழிய உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுடன் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக அது நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்தின் நேற்றைய அமர்வின் இறுதியில் மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள் போன்றவர்களுக்கு அவைத் தலைவர் நன்றி தெரிவித்தார். அதுமட்டுமன்றி முதலமைச்சரும் அவைத் தலைவரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
தொடர்ந்து வடக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி இடம்பெறும் என்று அவைத் தலைவர் அறிவித்தார்.
Post a Comment