குஜராத் சட்டசபைக்கான 2 ம் கட்ட தேர்தல் டிசம்பர் 14 ம் தேதி நடக்க உள்ளது. இதனால் அங்கு பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. முதல் கட்ட தேர்தலில் 68 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளதால், 2 ம் கட்ட தேர்தலின் போது கூடுதல் ஓட்டுப்பதிவு நடைபெற வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பிரதமர் மோடியும், காங்., துணைத் தலைவர் ராகுலும் குஜராத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆமதாபாத்தில் நாளை (டிசம்பர் 12) திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்ய மோடி மற்றும் ராகுல் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், மோடி மற்றும் ராகுலின் இந்த சாலை பிரசாரத்திற்கு அனுமதி அளிக்க ஆமதாபாத் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நாட்டின் பிரதமர், தனது சொந்த மாநிலத்தில் பிரசாரம் செய்வதற்கே போலீசார் அனுமதி அளிக்க மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்ட ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டே பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு இடையூறு அளிப்பதை தவிருங்கள் என பா.ஜ., மற்றும் காங்., கட்சிகளுக்கு போலீஸ் கமிஷனர் அனுப் குமார் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post a Comment