
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் அகதிகளுக்கான வாசலை அந்த நாட்டு அரசுகள் அடைத்துள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் நேற்று பிரார்த்தனை நடத்திய போப் பிரான்சிஸ் இந்த விவகாரம் குறித்துப் பேசினார். அவர் கூறியதாவது: சொந்த நாட்டை விட்டு வெளியேற யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் வன்முறையின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி அகதிகளாகி உள்ளனர். அவர்களுக்கு உலக நாடுகள் அடைக்கலம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 4 ஆண்டுகளில் மத்திய தரைக் கடலை கடந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. கடல் மார்க்கமாக அகதிகளாக துருக்கி, கிரீஸ் நாடுகளில் கரையேற முயற்சி செய்பவர்களை அந்த நாடுகளின் கடற்படைகள் நடுக்கடலில் விரட்டி அடிப்பதாக சர்வதேச தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. அண்மையில் மியான்மரில் இருந்து லட்சக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம்கள் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்தப் பிரச்சினைகளை போப் பிரான்சிஸ் மறைமுகமாக சுட்டிக் காட்டி அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post a Comment