எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய செலவுகளுக்காக 74 கோடி ரூபா பணம் செலவிட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாகவே இந்த பெருந்தொகை நிதி தேவைப்படுவதாகவும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் தொகை 4000க்கும் அதிகமாகியுள்ளதால் இவ்வாறு அதிகரிக்கவுள்ள உறுப்பினர்களது கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்கான பணத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் எதிர்வரும் இரு வாரங்களில் அமைச்சரவையில் பத்திரமொன்று சமர்ப்பிக்கவுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அந்தந்த தொகுதிகளில் கூட்டங்களை நடத்த கேட்போர்கூடங்களை அவர்களே செய்துகொள்ள வேண்டியுள்ளதாகவும் அவ்வாறான தேவையுடைய தொகுதிகளுக்கு நிதியினை வழங்கவேண்டியுள்ளதாகவும் அத்தோடு பிரதேசசபை உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 15ஆயிரம் ரூபாவும் நகர மற்றும் மாநகரசபை உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 20ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெறும் தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த புதிய கலப்பு முறையில் தேர்தல் நடைபெறுவதால் உறுப்பினர்களது தொகையும் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அதன் விளைவாகவே இவ்வளவு பெருந்தொகைப் பணம் செலவிட வேண்டியுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Post a Comment