தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் ‘பொக்கெட்’டுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இருக்கின்றார். எனது ஆட்சிக் காலத்தில் அவரைப் பல தடவைகள் பேச்சுக்கு அழைத்தேன். வருகிறேன் என்று கூறிவிட்டு கடைசி வரையில் வரவில்லை.இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று யாழ்ப்பாணம் வந்தார். வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தப்பட்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது:-
எனது ஆட்சிக் காலத்தில் இந்தப் பகுதியில் அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டது. உங்களுடைய பிள்ளைகள் இன்று இலங்கையில் கல்வியில் முன்னிலையில் இருக்கின்றார்கள். அது எங்களுக்குப் பெருமையாக இருக்கின்றது.
அரச தலைவர் தேர்தலில் தேவையில்லாத காரணங்களால்தான் தோல்வியடைய நேரிட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் இங்கு என்ன அபிவிருத்தி நடந்தது. எதுவும் நடக்கவில்லை. நாம் இந்தப் பகுதியை அபிவிருத்தி செய்தபோது எமக்கு இருந்தது ஒரேயொரு எதிர்பார்ப்புத்தான். தெற்கு மக்கள் அனுபவிக்கும் சுகபோகங்களை வடக்கு மக்களும் அனுபவிக்க வேண்டும்.
இன்று விவசாயிகள் பெரும் துன்பங்களை எதிர்நோக்கின்றார்கள். 350 ரூபாவுக்கும் பசளை இல்லை. பாகிஸ்தானிலிருந்து பசளை வரும் வரையில் நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கின்றது. தாய்லாந்திலிருந்து அரிசி வரும் வரையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கவேண்டியுள்ளது. தற்போதைய ஆட்சியில் இதுதான் நிலமை.
ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி இணைந்த கூட்டைத்தான் நாங்கள் அரசு என்று சொல்கின்றோம். எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் இருக்கின்றார். அவர் ரணிலின் பொக்கெட்டுக்குள்தான் இருக்கின்றார்.
அரசியல் தீர்வுக்காக என்னுடன் பேச்சுக்கு வர வேண்டும் என்று சம்பந்தனை பல தடவைகள் அழைத்தேன். வருகின்றேன் என்று கூறிப் போனார். ஆனால் வரவில்லை. எதிர்கட்சி என்று கூறும்போது அவர்கள் எதிர்கட்சி போன்று செயற்படவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபா வழங்கப்பட்டது என்று கூறுகின்றார்.
அவர்கள் அந்த நிதியில் எந்தத் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. வடக்கு மக்களை ஏமாற்றவேண்டாம். நான் இனவாதி இல்லை. எனது உறவினர் உங்கள் பகுதியைச் சேர்ந்தவர். குமார் நடேசன் எனது மைத்துனர் என்றார்.
Post a Comment