நாகாலாந்து அமைதி ஒப்பந்தம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்., தலைவர் ராகுல், பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.நாகாலாந்து அமைதி ஒப்பந்தம் தொடர்பாக டுவிட்டரில் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார் ராகுல். டுவிட்டரில் ராகுல் பதிவிட்டுள்ள கருத்தில், 2015 ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாகாலாந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மோடி புதிய வரலாற்றை படைத்தார். 2018 பிப்ரவரி மாதம் வரை அந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையிலேயே உள்ளது. எந்த முன்னேற்றமும் இன்றி அந்த ஒப்பந்தம் அப்படியே உள்ளது. எந்த அர்த்தமும் இல்லாமல் வெற்று வார்த்தைகளை மட்டுமே பேசும் முதல் இந்திய பிரதமர் மோடி தான் என குறிப்பிட்டுள்ளார்.
நாகாலாந்தில் நிலவி வரும் கிளர்ச்சிகளுக்கு ஒரு தீர்வு கண்ட பிறகு நாகாலாந்து சட்டசபை தேர்தலை நடத்தலாம் என பல்வேறு நாகா அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் ராகுல் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாகாலாந்து கிளர்ச்சிகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நாகாலாந்து தேசிய சோசலிச கழகத்துடன் பிரதமர் மோடி 2015 ல் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், பிரதமரின் ஒப்பந்தத்தில் என்ன இருந்தது, அவர் எதில் கையெழுத்திட்டார் என யாராலும் புரிந்து கொள்ள முடியாது. இந்த நாகா ஒப்பந்தம் 2016 நவம்பர் 8 ல் கொண்ட வரப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் நள்ளிரவில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதற்கு சமம். நாகாலாந்து விவகாரத்தில் மோடி நடந்து கொள்ளும் விதம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதாக உள்ளது. சிக்கலான பிரச்னைகளை உருவாக்குவதால் பெரும்பாலான மக்கள் அவர் மீது நம்பிக்கை இழந்த விட்டனர் என்றார்
Post a Comment