சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்று அந்நாட்டின் உளவுத் துறை தலைவர் முகமத் மசூம் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று வாரத்தில் மட்டும் காபூலின், இன்டர்கான்டினென்டல் ஹோட்டல், காவல் சோதனைச் சாவடி, ராணுவ அகாடமி என்று தலிபான் தொடர் தாக்குதல் நடத்தியது.இதில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தொடர் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையே காட்டுகின்றன என உலக நாடுகள் அச்சம் தெரிவித்தன.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்று ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உளவுத் துறை தலைவர் முகமத் மசூம் கூறும்போது, "இந்த தீவிரவாத நடவடிக்கை மூலம் தலிபான்கள் தங்களை அரசியல் அமைப்பு என்று கூற முடியாது. அவர்கள் ஒரு தீவிரவாத அமைப்பு.
எங்களிடம் பிடிப்பட்ட தீவிரவாதிகளை விசாரித்ததில் அவர்களுக்கு தீவிரவாதப் பயிற்சிகள் பாகிஸ்தானில் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதற்கான ஆதாரமும் எங்களிடம் உள்ளது” என்றார்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இரண்டு நாடுகள் அவர்கள் நாட்டில் அரங்கேறும் தீவிரவாதத் தாக்குதலுக்கு ஒருவரையொருவர் குற்றச்சாட்டி வருகின்றன. முன்னதாக பாகிஸ்தான் தீவிரவாத் தடுப்பு நடவடிக்கைகளில் சரியாக செயல்படவில்லை என்று அந்நாட்டு ராணுவத்துக்கு வழங்கும் நிதியை அமெரிக்கா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment