Ads (728x90)

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் அந்நிறுவனத்தின் தலைவர் வீடு முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலையால் கடல் வளத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், ஆலையை மேலும் 600 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. போராட்டங்கள் நடக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமாகும்.

இந்நிலையில், லண்டனில் உள்ள தமிழர்களும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

லண்டனில் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் வீடு முன்பு ஏராளமான தமிழர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான பறை அடித்தபடியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷமிட்டும் போராட்டத்தில் தமிழர்கள் ஈடுபட்டனர். ‘‘சுற்றுச்சூழலுக்கும், கடல் வளத்துக்கும் மக்களின் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை ஆதரிப்பதை இங்கிலாந்து அரசு நிறுத்த வேண்டும்’’ என்று போராட்ட அமைப்பாளர்களில் ஒருவரான மிரியம் ரோஸ் என்பவர் கூறினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget