யாழ்ப்பாண நல்லிணக்கபுரம் கிராம வீடமைப்பு வளாகத்தினுள் இரண்டாம் கட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.நலன்புரி மையங்களில் வசித்து வரும் குடும்பத்தினருக்காக அமைக்கப்பட்ட 25 புதிய வீடுகள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் யாழ் மாவட்ட செயலாளர் திரு. நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோரினால் இந்த வீடுகள் உத்தியோகபூர்வமாக உரிமையாளர்களுக்கு நேற்று வழங்கப்பட்டன.
கீரிமலை வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக இராணுவம், கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த முப்படையினரது ஒத்துழைப்புடன் இந்த வீடமைப்பு கட்டுமானப்பணிகள் நிறைவு செய்து இந்த உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
கீரிமலை திட்டத்தின் படி, 20 பேச்சர் காணியில் ஒவ்வொரு வீட்டுத் தொகுதிகளும் 1 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் ஒரு படுக்கையறை , வாழ்க்கை மற்றும் சாப்பாட்டு தொகுதி, சமையல் அறை, கழிப்பறை மற்றும் ஒரு குளியலறையை கொண்டுள்ளன.
ஒவ்வொரு வீட்டிற்கும் நீர் மற்றும் மின்சாரம் வழங்குவதற்கு கூடுதலாக, சாலைகள், சமூக மையம், வடிகால் அமைப்புகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலை போன்ற பொது வசதிகளும் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டு நல்லினக்கபுரம் வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டமாக மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வீடுகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் இடம்பெயர்ந்த முகாம்களில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு நேற்று இரண்டாம் கட்டமாக 25 வீடுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி, 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Post a Comment