Ads (728x90)

இலங்கைக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் எந்தவொரு தொழில்வாண்மையாளருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பொறியியலாளர் நிறுவனம் மற்றும் இலங்கை கட்டட நிர்மாண வடிவமைப்பு நிறுவன பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (18) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய பிரதமர் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் தொழில் வாய்ப்புக்கள் வெளிநாட்டவர்களுக்கு கிடைக்காது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதும், தவறான கருத்துக்களை நீக்குவதும், இதன் நோக்கமாகும். வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு வரவழைப்பது இதன் பிரதான நோக்கமாகும்.

இலங்கையின் தொழில்வாண்மையாளர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது இதன் இலக்குகளாகும்.

இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் இலங்கையிலுள்ள எந்தவொரு தொழில்துறை சார்ந்தவர்களுக்கும் தொழில் சந்தர்ப்பங்கள் இல்லாமல் போவதோ அல்லது அநீதி இழைக்கப்படவோ மாட்டாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையே செய்து கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக பல்வேறு தொழில்துறை சார்ந்தோருக்கு இருக்கும் பிரச்சினைகள், சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் நோக்குடன் தொடர்ந்தும் பேச்சு நடத்துவதற்கு இந்த கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஒப்பந்தம் மற்றும் அதன் இணை ஆவணங்கள் தொடர்பாக பிரச்சினைகள் எழுந்துள்ள சரத்துகள் தொடர்பாக அறியத்தருமாறும் அவை தொடர்பாக உண்மை நிலைமையை தெளிவுபடுத்த முடியுமென்றும் பிரதமர் இங்கு உறுதியளித்தார்.

இதேபோன்று ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக செயற்திறனுடன் தொடர்புபடவும் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்தனர். இக்கண்காணிப்பின்படி ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமென்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.


Post a Comment

Recent News

Recent Posts Widget