Ads (728x90)

முப்பது வருட திரை உலக வாழ்க்கையில் 90-க்கும் மேற்பட்ட சினிமாக்களை இயக்கி யிருக்கும் டைரக்டர் பிரியதர்ஷனின் வீட்டு அலமாரிகளை எல்லாம் அவருக்கு கிடைத்த விருதுகள் நிறைத்துக்கொண்டிருக்கின்றன. அவை எல்லாம் கொடுக்காத மகிழ்ச்சியை, மகள் கல்யாணியின் வெற்றி அவருக்கு கொடுத்திருக்கிறது.

 கல்யாணி அறிமுகமான முதல் படத்திலே விருது பெற்றிருக்கிறார். தெலுங்கு படத்தில் நடித்த அவருக்கு சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருது கிடைத்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை மகள், பிரியதர்ஷனிடம் சொல்ல, அந்த இன்ப அதிர்ச்சி அன்று இரவு முழுவதும் அவரை தூங்க விடாமல் செய்திருக்கிறது.

பிரியதர்ஷன்- நடிகை லிசியின் மகளான கல்யாணி அமெரிக்காவில் ஆர்க்கிடெக்சர் துறையில் பட்டம் பெற்றவர். பின்பு பிரபல சினிமா ஆர்ட் டைரக்டர் சாபுசிரிலிடம் இணைந்து பணியாற்றினார். கிருஷ்-3 என்ற இந்தி படத்தில் அவர் கலை வேலைப்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தன. திடீரென்று ஒரு நாள் அவர் தந்தையிடம், தான் நடிக்கப்போவதாக கூறியதை அவரால் நம்ப முடியவில்லை. அதுவரை நடிப்பு பற்றி வாய்திறக்காத கல்யாணி அவ்வாறு கூறியதும், ‘எதற்கும் நன்றாக யோசித்து முடிவெடு’ என்று தாயும், தந்தையும் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் அந்த வேகத்திலே கல்யாணி கதாநாயகியாகிவிட்டார். நாகார்ஜூனா தயாரித்து அவரது மகன் அகில் அக்கினேனி கதாநாயகனாக நடித்த ‘ஹலோ’ என்ற தெலுங்கு படத்தில் அரங்கேறிவிட்டார். முதல் படமே அவருக்கு சிறந்த அறிமுக நாயகிக்கான விருதினை பெற்றுக்கொடுத்துவிட்டது.

அந்த விருதினை அம்மா லிசியின் கையாலே பெற்றிருக்கிறார். கல்யாணியோடு சேர்ந்து இதே காலகட்டத்தில் ெதலுங்கில் ஐந்து நாயகிகள் அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விருதினை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக கல்யாணி வலம் வருகிறார்.

இந்த வெற்றியோடு நினைத்துப்பார்க்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. வெற்றிகரமான படங்களை இயக்கி புகழின் உச்சிக்கு சென்ற பிரியதர்ஷன் 1990-ம் ஆண்டில் திடீர் வீழ்ச்சியை சந்தித்தார். அவரது வெற்றிக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டதாக பலரும் கருதிக்கொண்டிருந்தார்கள். அதை தொடர்ந்து சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தனது இருப்பிடத்தையும் அவர் மாற்றினார்.

அப்போது வந்தனம் என்ற மலையாள சினிமாவை பார்த்துவிட்டு, அதை தெலுங்கில் இயக்கவேண்டும் என்று பிரியதர்ஷனை, அன்று புதுமுகமாக இருந்த நாகார்ஜூனா அணுகினார். அந்த படத்தை இயக்கியதன் மூலம் திரைஉலகில் தனது அடுத்த இன்னிங்சை தொடங்கினார், பிரியதர்ஷன். நாகார்ஜூனா அவருக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் மூலம், பிரியதர்ஷனுக்கு இந்தி திரை உலக கதவுகளும் திறந்தன.

கடுமையான உழைப்பின் மூலம் மீண்டும் பிரியதர்ஷன் புகழ் நிலைக்கு வந்துவிட்டார். அதே நாகார்ஜூனா 27 வருடங்களுக்கு பிறகு அவரது மகளையும் திரையில் அரங்கேற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget