வடகொரியாவும், தென்கொரியாவும் பரம்பரை எதிரி நாடுகளாக இருந்து வந்தன. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்தது. இதனால் அமெரிக்காவையும் வடகொரியா பகை நாடாக கருதியது. அணு ஆயுதங்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை உருவாக்கிய வடகொரியா அமெரிக்கா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டியது.வடகொரியா மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கடும் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் மத்தியில் சமரசம் ஏற்படுத்த சீனா முயற்சித்தது. தென்கொரியாவும் இறங்கி வந்து அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கு வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து அமெரிக்கா-வடகொரியா அதிபர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சிங்கப்பூரில் இருநாட்டு அதிபர்களும் ஜூன் 12 ஆம் தேதி சந்தித்து பேசினார்கள். அப்போது டிரம்ப்-கிம்ஜாங்உன் இடையே சமரச ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதில், வடகொரியாவில் உள்ள அணுஆயுதங்கள் அனைத்தையும் அழித்து விடுவதாக கிம் ஜாங் உன் ஒப்புதல் தெரிவித்திருந்தார்.
ஆனால், வடகொரியா அணு ஆயுத ஆராய்ச்சிகளை கைவிடவில்லை என்று 38 நார்த் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டது இது, அமெரிக்காவின் சந்தேகத்தை வலுப்படுத்தியது. இந்த சூழலில், வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்கள் மற்றும் பலிஸ்டிக் ஏவுகணைகளை இந்த ஆண்டுக்குள் அழிக்கும் பணியை அமெரிக்கா முன்னின்று செய்யும் என்று டொனால்டு டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவின் இந்த திட்டம் தொடர்பாக, வடகொரியாவிடம் விரைவில் அமெரிக்க தூதரக அதிகரி மைக் பொம்பே ஆலோசனை நடத்துவார் எனவும், இதன்மூலம் வடகொரியாவுக்கு எதிரான தடைகளை ரத்து செய்வது துரிதமாகும் எனவும் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.
Post a Comment