Ads (728x90)

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவேயில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  நாடாளுமன்றில் கூறியுள்ளார்.

நான் பொருளாதாரத்தை பாதுகாக்கவே முன்னுரிமை வழங்குகிறேன். அதனை செய்யாவிட்டால் எமக்கு நாடு இல்லாமல்போகும். அதனால் நாட்டை இல்லாமலாக்கி அரசியலமைப்பை பாதுகாக்க முடியுமா? என கேட்டுள்ளார். நாட்டை பாதுகாத்தால்தான் அரசியலமைப்பை பாதுகாக்க முடியும். 

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிமை இடம்பெற்ற அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான ஜனாதிபதியின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதியிடம் தெரிவிக்கையில் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் நிதி ஒதுக்கி இருக்கிறது. ஒதுக்கிய பணத்தை நிதி அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி அதனை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்காமல் இருப்பதே தற்போதுள்ள பிரச்சினையாகும்.

அதனால் தேர்தல் ஆணைக்குழு கோரும் 10 பில்லியன் ரூபாவை வழங்குமாறு கேட்கிறோம். அத்துடன் தேர்தல் ஆணைக்குழு தேர்தலை அறிவித்தால் நிதி அமைச்சு, அரசாங்க அச்சகம் உட்பட அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அது அவர்களின் கடமை. ஒத்துழைப்பு வழங்காவிட்டால் 03 வருடம் சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும். அத்துடன் அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லாமல் நிதி ஒதுக்கவேண்டாம் எனவும், அரச நிறுவனங்கள் கடனுக்கு வேலை செய்யவேண்டாம் எனவும் அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

அதற்கு ஜனாதிபதி பதிலளிக்கையில், வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை என்னால் உடனடியாக தற்போது வழங்க முடியாது. வருட இறுதியாகும்போது இந்த நிதி செலவழிக்கப்படவேண்டும் என்றே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் வருமானம் கிடைப்பதாக இருந்தால் எமக்கு செலவிடமுடியும். அவ்வாறு வருமானம் வருவதில்லை. ஒரு ரில்லியன் வருமானம் வரும்போது 3 ரில்லியன் செலவிட முடியாது .அப்படி என்றால் பணம் அச்சிட பாராளுமன்றம் அனுமதிக்கவேண்டும்.

ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையின் பிரகாரம் பணம் அச்சிடமுடியாது. அதனால் இருக்கும் நிதியின் அடிப்படையிலேயே செலவிட முடியும் எனவும் தெரிவித்துள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget