நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள புதிய நடைமுறையின்படி, இனிவரும் காலங்களில் சமாதான நீதவான் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய கல்வித் தகுதிகள் மற்றும் வயதுக் கட்டுப்பாடுகள் அவசியமாகும்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 30 முதல் 75 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே இனி சமாதான நீதவான்களாக நியமிக்கப்படுவர்.
முன்னைய காலங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்ட நிலையில், இனி தகுதியின் அடிப்படையிலேயே நியமனங்கள் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இப்பதவியில் இருக்கும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களின் தற்போதைய பணிகளில் எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது 66,315 சமாதான நீதவான்கள் சேவையில் உள்ளனர். இவர்களுக்கான சேவையை மேம்படுத்த அமைச்சு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து சமாதான நீதவான்கள் குறித்த விபரங்களை உள்ளடக்கிய புதிய தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
தற்போது சேவையில் உள்ள அனைத்து சமாதான நீதவான்களுக்கும் அவர்களின் கடமைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்த விசேட பயிற்சித் திட்டங்களை வழங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்தச் சீர்திருத்தங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சட்ட ஆவணச் சான்று ஒப்பச்சேவைகளில் அதிக வெளிப்படைத்தன்மையும், தரமும் பேணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment