Ads (728x90)

அஸர்பைஜானில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான மனோஜ் சுரங்க எனப்படும் ”படுவத்தே சாமர”பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

நீண்ட காலமாக துபாயில் தலைமறைவாக இருந்த இவர், ஒரு வருடத்திற்கு முன்பு அஸர்பைஜானுக்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில் அங்கு அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

துசித ஹல்லொலுவ மீது தாக்குதல் நடத்தியமை, கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்கான ஆயுதங்களை வழங்கியமை மற்றும் இலங்கையில் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தில் பிரதான சந்தேகநபராக இவர் கருதப்படுகிறார்.

இலங்கையில் பல கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய 'படுவத்தே சாமர', பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பினார். பெரும்பாலான குற்றவாளிகள் டுபாய்க்குத் தஞ்சமடையும் நிலையில், சாமர யாராலும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்து அசர்பைஜான் (Azerbaijan) நாட்டைத் தேர்ந்தெடுத்தார். 

ஆனால், இலங்கை பொலிஸாரால் சர்வதேச பொலிஸார் மூலம் 'சிவப்பு அறிவித்தல்' (Red Notice) விடுக்கப்பட்டது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர், அசர்பைஜான் தலைநகரில் சாமர சாதாரணமாக உலவிக்கொண்டிருந்தபோது, அந்நாட்டு விசேட பாதுகாப்புப் படையினர் மின்னல் வேகத்தில் அவரைச் சுற்றிவளைத்து கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட சாமரவை அழைத்து வர இலங்கையிலிருந்து விசேட பொலிஸ் குழுவொன்று விரைந்தது. அசர்பைஜானில் இருந்து இந்தியா வழியாக நேற்று இரவு 11:30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர் கொண்டு வரப்பட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு குற்றப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget