Ads (728x90)

கடல்சார் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஆய்வு செய்து உற்பத்தி செய்வதற்காக உலகளாவிய நிறுவனங்களை இலங்கை அரசு அழைக்கவுள்ளது.

கடல்சார் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஆய்வு செய்து உற்பத்தி செய்வதற்காக உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், இலங்கை தனது 2026 ஆம் ஆண்டுக்கான உரிமம் வழங்கும் சுற்றை தொடங்கவுள்ளதாக இலங்கை பெற்றோலிய மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.

உரிமம் வழங்கும் நடைமுறை, இன்று காலை 10.00 மணிக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

இலங்கை பெற்றோலிய மேம்பாட்டு ஆணையத்தின் கூற்றுப்படி, இந்த உரிமம் வழங்கும் சுழற்சியானது இலங்கையின் கடல்சார் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச எரிசக்தி நிறுவனங்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு மூலோபாய முயற்சியாகும்.

இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் பயன்பாட்டிற்கு உகந்த எரிவாயு இருப்புகள் உள்ளதை, இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த ஆணையகம் தெரிவித்துள்ளது.

இந்த வளங்களை உரிய நேரத்தில் மேம்படுத்துவது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், தொழில் வளர்ச்சிக்கும் ஒரு உந்துசக்தியாக அமையும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மன்னார் கடற்பரப்பில் கணிசமான அளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget