
பல்வேறு ஓவிய கண்காட்சிகளை நடத்தியுள்ள பிரபல ஆர்டிஸ்ட் ஸ்ரீதர் தற்போது திரைப்படத் தயாரிப்புத் துறையில் கால்பதித்துள்ளார். கல்லூரி மாணவர்களை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற அவரது நீண்டநாள் ஆசை ‘மய்யம்’ என்ற படம் மூலம் நிறைவேறியிருக்கிறது. இப்படத்தின் தலைப்பை (மய்யம்) கமல் ஏற்கனவே பதிவு செய்திருந்தார். அவரிடம் அனுமதி பெற்று தனது படத்திற்கு அந்த தலைப்பை வைத்துள்ளார் ஸ்ரீதர்.
வங்கி ஏடிஎம் கொள்ளை, பாதுகாப்பின்மையை மையப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கதை திரைக்கதையை உருவாக்கிய ஸ்ரீதர், தனது ஸ்கெட்ச்புக் புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஆதித்யா பாஸ்கரன் என்ற மாணவர் இயக்கியிருக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியின் மகன் கே.ஆர். இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 12 மாணவர்கள் தவிர முக்கிய கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடித்திருக்கிறார். நடிப்பு தவிர தொழில்நுட்ப பணிகளிலும் பள்ளி-கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு இப்படத்தில் உள்ளது.
ஒரே இரவில் நடக்கும் கதை இது. வங்கியில் கொள்ளையடிக்க வரும் ஒரு கும்பல் வங்கிக்குள் மாட்டிக்கொள்கிறது. ஒரு அறையில் கொள்ளைக் கும்பலும், மற்றொரு அறைக்குள் அவர்களை வழிநடத்தும் ரோபோ சங்கரும் இருக்கிறார்கள். விடிவதற்குள் தப்பியாக வேண்டும் என்ற நிலையில், கொள்ளையர்களை ரோபோ எப்படி வழிநடத்துகிறார்? என்பதுதான் கதை. எனவே, ரோபோ சங்கருக்கு இதில் அதிக காட்சிகள். சுமார் 50 நிமிடங்கள் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் ஸ்ரீதர்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீதர், தனது முதல் படமான மையம், ரசிகர்களை கவரும் வகையில் காதல், நகைச்சுவை மற்றும் திகில் உணர்வுகளின் கலவையாக இருக்கும் என்றார். வங்கி ஏடிஎம்-களில் எந்த நேரத்திலும் பணம் எடுக்கலாம் என்ற வசதி இருக்கிறது. ஆனால், பல இடங்களில் உள்ள ஏடிஎம்-களில் பணத்தை எடுத்துச் செல்வோருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையின் பிரதிபலிப்பே மய்யம் என்றும் அவர் கூறினார்.
Post a Comment