பிரதான கட்சிகளில் உள்ளவர்களிலேயே திருடர்கள் உள்ளனர். தற்போது ஊழலில் ஈடுபடுபவர்கள் யார் யார் என்பது எனக்கு நன்றாக தெரியும். இதற்கான ஆதாரமும் உள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
பிரதான கட்சிகளில் உள்ளவர்கள் கூட்டாட்சி அரசாங்கத்திலிருந்து விலகுவதாக எச்சரித்துள்ளமை தொடர்பில் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் பொது எதிரணி ஆகிய பிரதான கட்சிகளில் உள்ளவர்களே திருடர்களாக உள்ளனர். இது தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் பேசும் போதுகூட நான் குறிப்பிட்டிருந்தேன். இதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. அதனால்தான் நான் இக்கருத்தை பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தேன். பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய உரை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் என்னிடம் விளக்கம் கேட்டிருந்தனர். அது எனது கருத்து என்றபடியால் பின்னர் அதனை விட்டுவிட்டேன். ஆனால் கடைசி பாராளுமன்ற அமர்விலும் கூட பிரதான கட்சிகளில் உள்ளவர்கள் எந்தவித ஊழலையும் செய்யாததுபோல் வெளிக்காட்ட முனைகின்றனர். இது தொடர்பில் பேசுகின்றனர்.
சில சிரேஷ்டத்துவமானவர்களும் அரசாங்கத்தில் இருந்துகொண்டு இவ்வாறு எதிர்முனை பேச்சுகளை தொடுப்பது சரியா எனவும் பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய உரை தொடர்பிலும் கேள்வியெழுப்பியிருந்தனர். ஆனால் பிரதான கட்சிகளில் உள்ளவர்களிலேயே திருடர்கள் உள்ளனர் என்பதை என்னால் உறுதியாக கூறமுடி யும் என்றார்.

Post a Comment