இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நீண்ட நாட்களுக்குப் பிறகு தனஞ்சய டி சில்வா அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை சந்திமாலுக்கு பதிலாக அவரின் தலைமைப் பதவி ரங்கன ஹேரத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
காலியில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியை இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நேற்று மாலை 6 மணியளவில் அறிவித்தது.
அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அணியின் மூலம் மீண்டும் இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வா மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருந்த தினேஷ் சந்திமால், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியை அனுபவமிக்க சுழல் பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் வழிநடத்தவுள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இலங்கை அணியானது 8 துடுப்பாட்ட வீரர்கள், 3 சுழல்பந்து வீச்சாளர்கள் மற்றும் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது.
இலங்கை டெஸ்ட் அணி
ரங்கன ஹேரத் (அணித்தலைவர்), உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, அஞ்சலோ மெத்தியூஸ், அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, தில்ருவான் பெரேரா, மலிந்த புஷ்பகுமார, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ.
கடந்த வருடத்தில், ஆஸி.யுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்கள் குவித்திருந்த தனஞ்சய டி சில்வா தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தினால் இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். தற்போது சந்திமாலுக்கு பதிலாக தனஞ்சயவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அவர் சரியாகப்பயன்படுத்தி அணியில் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment