இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை தோல்வி அடைந்ததையடுத்து மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் நேற்று மாலை தம்புள்ளை ரங்கிரி விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டதனால் அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.
போட்டி முடிந்தவுடன் இலங்கை அணி ரசிகர்கள் வீரர்களுக்கு எதிராக கூச்சலிட்டும் ஆர்ப்பாட்ட தோரணையில் முற்றுகையிடும் வண்ணமாகவும் குழுமியிருந்தனர். இதன்போது கலகம் அடக்கும் பொலிஸார் ஸ்தலத்திற்கு அழைக்கப்பட்டனர்.
பொலிஸாரின் உதவியுடன் இந்திய அணி வீரர்கள் பாதுகாப்பாக ஹோட்டலுக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் இலங்கை அணி வீரர்களை மைதானத்துக்கு வெளியே வர விடாமலும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு முன்பும் இலங்கை அணி ரசிகர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்
இலங்கை கிரிக்கெட்டில் இருப்பதாக கூறப்படும் அரசியல் ஊடுருவலை இல்லாமல் ஆக்கக்கோரியும் ஆட்ட நிர்ணய சதி மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்து இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் வீரர்களை பார்த்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும் 1996 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்ற அணியை போன்று தலைசிறந்த இலங்கை கிரிக்கெட் அணியை மீண் டும் தமக்கு தர வேண்டும் என்றும் ரசிகர்கள் கோஷமிட்டனர்.
இதன்போது சுமார் அரை மணிநேரத்துக்கு மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் வீரர்களை ஹோட்டலுக்கு செல்லவிடாது தொடர்ந்தும் இடைமறித்திருந்தனர். இந்த பதற்றமான சந்தர்ப்பம் தோன்றியிருந்த நிலையில் இலங்கை அணியின் வீரர்கள் பஸ்ஸினுள் ஏற முடியாமல் மைதானத்தின் உள்ளேயே நிற்கும் நிலை ஏற்பட்டிருந்தது.
அதன் பின்னர் ரசிகர்களின் ஆர்ப்பாட் டத்தை கலைத்த கலகம் அடக்கும் பொலிஸாரின் உதவியுடன் இலங்கை அணி வீரர்களும் பாதுகாப்பான முறையில் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இதற்கு முன்னர் இந்திய அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியிலும் 3 – 0 என்ற வீதத்தில் வெள்ளையடிப்புச் செய்யப்பட்டிருந்த இலங்கை அணியானது நேற்றைய தினம் இந்திய அணியுடனான ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுக்களை இழந்து தோல்வி அடைந்திருந்த நிலையில் கடும் விரக்தி அடைந்திருந்த ரசிகர்களே பொறுமை இழந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.
Post a Comment