2009ஆ-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று விளையாடிய போது மைதானத்துக்கு செல்லும் வழியில் அணி பயணித்த பஸ் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இலங்கை வீரர்கள் காயத்துடன் உயிர் தப்பினார்கள்.
அதன் பிறகு பெரிய அணிகள் எதுவும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. கடந்த 2015ஆ-ம் ஆண்டில் சிம்பாப்வே அணி மட்டும் ஒரு முறை சென்று விளையாடியது. எல்லா அணிகளும் செல்ல மறுப்பதால் பாகிஸ்தான் அணியின் சர்வதேச போட்டிகள் அனைத்தும் பொதுவான இடமான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்த அந்த நாட்டு கிரிக்கெட் சபை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு அங்கமாக எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) உலக லெவன் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 போட்டித் தொடரில் விளையாட சம்மதித்துள்ளது.
அதே மாதத்தில் இலங்கை அணி லாகூரில் ஒரே ஒரு இருபதுக்கு 20 போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி, எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் பாகிஸ்தான் சென்று 3 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார்.
Post a Comment