20ஆவது திருத்தச்சட்டம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறி க்கை ஆகிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வ தற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு எதிர்வரும் 19ஆம் திகதி முற்பகல் 11மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில் கூடவுள்ளதாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்தபாராளுமன்றக் குழு கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை நடத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் எதிர்க்கட்சித்தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனுக்கும் ஏனைய பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்காலநாதன் எம்.பி, சித்தார்த்தன் எம்.பி ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாராளுமன்றக்குழு கூட்டம் தொடர்பான உங்களது அறிவித்தல் கடிதம் கிடைத்தது. அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பாகவும் புதிய அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய அரசியல் யாப்பு வரவிருக்கின்ற சூழலில் தேர்தல் சீர்திருத்தமான 20ஆவது திருத்தம், மற்றும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை ஆகியவை கொள்கை முடிவுடன் தொடர்புபட்டுள்ளது.
இதனால் பாராளுமன்றக் கூட்டத்தினை கூட்டுவதற்கு முன்னதாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தினைக் கூட்டி அங்கத்துவ கட்சிகளின் கருத்தறிந்து அதற்கேற்ப முடிவெடுப்பதே சிறப்பானதாகவிருக்கும். ஆகவே தாங்கள் சிறப்பாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினைக் கூட்டுமாறு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோருகின்றது. எமது கோரிக்கையை ஏற்று செயற்படுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என்றுள்ளது .
இதேவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு பங்காளிக்கட்சியான புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் எம்.பி. இவ்விடயம் குறித்து கூறுகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் தீர்மானது கூட்டமைப்பினது தீர்மானமாக அமையும். ஆகவே இவ்விடயங்களில் கூட்டமைப்பின் தீர்மானத்தினை எடுப்பதாயின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்படுவது சிறந்ததாக அமையும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவுள்ளது என்றார்.
அதேவேளை ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி வெளிநாடு சென்றுள்ளமையால் தொடர்புகொள்ளமுடியாது போனமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment