Ads (728x90)

கோயில் அர்ச்சரை திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.

சமீபகாலமாக கோயில்களில் அர்ச்சகர்களாக பணியாற்றும் பிராமண வகுப்பை சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொள்ள பெண்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு வருமானம் குறைவாக இருப்பதும் சமூகத்தில் மரியாதை குறைவாக இருப்பதுமே இதற்குக் காரணம். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த தெலங்கானா மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தெலங்கானா பிராமண நல வாரிய தலைவரும் முதல்வரின் ஆலோசகருமான ரமணாச்சாரி கூறியதாவது: பொதுவாக கை நிறைய சம்பாதிக்கும் ஆண்களை திருமணம் செய்துகொள்ளவே பெண்கள் விரும்புகின்றனர்.

ஊதியம் குறைவாக கிடைக்கும் கோயில் அர்ச்சகர்களை திருமணம் செய்துகொள்ள பலர் தயங்குகின்றனர். இதனால் அர்ச்சகர்களுக்கு திருமணம் ஆவதில் தாமதம் ஏற்படுவதும் பலர் திருமணம் செய்து கொள்ளாமலேயே பிரம்மசாரிகளாக இருந்து விடுவதும் தெரியவந்துள்ளது.

கோயில் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் வகையில், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ‘கல்யாண மஸ்து’ என்ற திட்டத்தை அமல்படுத்த உள்ளார். இதன்மூலம், பிராமண குலத்தைச் சேர்ந்த கோயில் அர்ச்சகர்களை திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்களுக்கு திருமணத்துக்கு முன்பே செலவுக்காக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

அதன் பிறகு புதுமண தம்பதி பெயரில் அரசு வங்கியில் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்யப்படும். இந்தப் பணத்தை அவர்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் முழுமையாக எடுத்துக் கொள்ளலாம்.

இதன்மூலம் இவர்களின் வாழ்க்கை சிறக்கும். இந்தத் திட்டம் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படும். இவ்வாறு ரமணாச்சாரி தெரிவித்தார். கோயில் அர்ச்சகர்களுக்கு நவம்பர் முதல் அரசு ஊழியர்களுக்கு இணை யான ஊதியம் வழங்கப்படும் என தெலங்கானா அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget