நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பிற்கு கேரள ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. கேரளாவில் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இதுதொடர்பாக முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் கைது செய்யப்பட்டார்.அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கடந்த ஜூலை 10-ம் தேதி போலீசார் கைது செய்து அலுவா சிறையில் அடைத்தனர்.
திலீப் ஜாமின் கேட்டு 4 முறை கோர்ட்டை நாடினார். ஆனால், ஜாமின் வழங்க கோர்ட் மறுத்த நிலையில் ஐந்தாவது முறையாக திலீப் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். மீண்டும் மீண்டும் திலீப் ஜாமின் மனு தாக்கல் செய்ததை கோர்ட்டும் கண்டித்தது.
இந்நிலையில் ஐந்தாவதாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை இன்று(அக்., 3) வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட், திலீப்பிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
திலீப் கைதாகி 80 நாட்களுக்கு மேலாகியும் போலீஸ் தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை, அதன் அடிப்படையில் திலீப்பிற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் திலீப் வெளிநாடு எங்கும் செல்லாத வகையில் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் படி நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment