
வேலுநாச்சியார் வாழ்க்கையை சொல்லும் நாட்டிய நாடத்தை ஸ்ரீராம் சர்மா என்பவர் நடத்தி வருகிறார். உலகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த நாடகத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரவளித்து வருகிறார். நேற்று இந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி சென்னை நாரதகான சபாவில் நடந்தது. நாடகத்திற்கு பிறகு அது சினிமாவாகும் அறிவிப்பை வைகோ வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது :
இந்த நாட்டிய நாடகத்தில் நீங்கள் வேலுநாச்சியாரை கண்டீர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பாக நடிகர் திலகம் நமக்கு எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனாக காட்சி அளித்தாரோ, அதைப்போல சகோதரி மணிமேகலைசர்மா வேலுநாச்சியாராகவே இங்கு காட்சி அளித்தார். வேலுநாச்சியார் திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு, அதை கண்ணகி பிலிம்ஸ் மூலம் தயாரிப்பதில் பெருமைபடுகிறேன்.
இந்த நாடகத்தை இயக்கிய ஸ்ரீராம் சர்மா இயக்குகிறார். சினிமாவை நன்றாக உள்வாங்கிக் கொண்டு இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர் இந்தப் படத்தை இயக்குவார். இது லாபநோக்கத்துக்காக தயாரிக்கப்படம் அல்ல. தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் படம் என்றார் வைகோ.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேசியதாவது:
இந்த நாடகத்தில் வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில், பெரிய மருது, சின்ன மருது கதாபாத்திரத்தில் நடித்தவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் நடித்த நடிப்பு , தங்களுடைய கடுமையான உழைப்பு அனைத்துக்கும் பாராட்டுக்கள். இங்கே நமது திரைத்துறையை சேர்ந்த பலரும் இருப்பார்கள். பிரிட்டிஷ் அரசருக்கு வரிகட்டுவதை எதிர்த்து வேலுநாச்சியார் போராடினார்.
தமிழக அரசை கேளிக்கை வரியை ரத்து செய்ய வைப்பது எப்படி என்று நாங்கள் போராடி கொண்டு இருக்கிறோம். நிச்சயம் ஒரு நல்ல தீர்வு எங்களுக்கு கிடைக்கும். நான் கத்தியால் சண்டை போட போவதில்லை, புத்தியால் தான் சண்டை போட போகிறேன். கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
Post a Comment