அநுராதபுரம் கைதிகள் வழக்கு: நாளையே முடிவு
அநுராதபுரத்தில் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் மூவரினதும் வழக்கு விசாரணையை வவுனியாவுக்கு
இடம்மாற்றம் செய்வது தொடர்பில் நாளை இறுதியான முடிவு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து உரிய தரப்பினருடன் நாளை பேச்சு நடத்தி உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்று அரசு நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தது.
நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்கிழமை அரசியல் கைதிகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தை எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரியிருந்தார்.
விவாதத்தில் பேசிய அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, டி.எம்.சுவாமிநாதன் மற்றும் நீதித் துறைப் பிரதி அமைச்சர் சமிந்த துமந்த ஆகியோரே நாளைய கூட்டத்தில் இது குறித்து ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்க உரையாற்றுகையில்,
‘‘புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். சட்டமா அதிபர் திணைக்களம் உரிய முறையில் செயற்படுவதாக இல்லை. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழர் மாத்திரம் கைது செய்யப்படவில்லை. சிங்களவர்களும் முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதி அமைச்சர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அரசியல் கைதிகள் தொடர்பாக பேச்சு நடத்துவோம்’’ – என்றார்.
நீதிப் பிரதி அமைச்சர் சமிந்த துமந்த, ‘‘அரசியல் கைதிகள் விடயத்தில் நல்ல தீர்வினைக் காண்பதற்காகவே வழக்கு வவுனியாவில் இருந்து அநராதபுரத்திற்கு மாற்றப்பட்டது. இதில் சிக்கல்கள் இருந்தால் அது தொடர்பில் பேச்சு நடத்த தயாராக உள்ளோம்’’ என்றார்.
அமைச்சர் சுவாமிநாதன் பதிலளிக்கையில், ‘‘அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபருடன் பேச்சு நடத்தினோம். இரு வாரத்தில் பாரதூரமான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று கூறினார். அநுராதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு மாற்றப்பட்டமை குறித்தும் பேசினேன். மொழிபெயர்ப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாகக் கூறினார்’’ – என்றார்.
Post a Comment