
தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி நடமாடும் சேவை இவ் ஆண்டு மூன்று இடங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் முதலாவது ஜனாதிபதி நடமாடும் சேவை பொலனறுவையிலும், இரண்டாவது நடமாடும் சேவை காலியிலும் நடைபெற்ற நிலையில் மூன்றாவதும் இவ்வாண்டின் இறுதியுமான நடமாடும் சேவை எதிர்வரும் 21 ஆம் திகதி வவுனியாவில் இடம்பெறவுள்ளது.
இந் நடமாடும் சேவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர குணவர்த்தன உள்ளிட்ட பல அமைச்சர்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது வன்னிப் பகுதியில் வசிக்கும் 5,000 மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், திவிநெகும திட்டத்தின் கீழ் ஆயிரம் பேருக்கு வாழ்வாதார உதவியும், இளைஞர்களின் தொழில் முயற்சிக்காக ஆயிரம் பேருக்கான உதவித் திட்டங்களும் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் இந் நடமாடும் சேவையில் அடையாளஅட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், காணி உறுதிப்பத்திரம், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment