தமிழ் அரசியல் கைதிகளில் சட்டடிநடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டிய கைதிகள் தவிர்ந்த, ஏனைய கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.அங்கு நிலவும் தாமதம் காரணமாகவே கைதிகளின் விடுதலை பிரச்சினையா கின்றது. இவ்வாறு அமைச்சரவை இணைப்பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அரசியல் கைதிகளின் விடுதலை, அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத் துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை மீண்டும் வவுனியா நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்வது என்பன தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
சிறையிலுள்ள தமிழ்க் கைதிகள் விரைவாக விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடருமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.
15 வருடங்களுக்கு அதிகமாக தமிழ்க் கைதிகள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வாழ்வின் பாதிக்காலம் வீணாகிவிட்டது. இவர்களை விடுவிக்குமாறு நான் பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளேன்.
குற்றமற்றவர்களைத் தடுத்துவைத்தல் நியாயமான செயற்பாடல்ல. இதற்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மக்கள விடுதலை முன்னணியின் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்கள் கடந்த காலங்களில் மீண்டும் வன்முறைகளில் ஈடுபட்டதைக் காணமுடிந்தது.
ஆனால், மறுவாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டனர் எனத் தகவல் இல்லை – என்றார்.
Post a Comment