
இந்த நிலைமைக்கு நாட்டை கொண்டு வந்தமைக்கு காரணமானவர்களை இனங்காணும் வகையில் விசாரணையை ஆரம்பிக்கவுள்ளோம். இந்த விசாரணையின் போது நான் முன்னின்று செயற்படுவேன். இதன்படி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் 2 கீழ் தினேஷ் குணவர்தன மற்றும் அநுர குமார திஸாநாயக்க எம்.பிக்கள் வினவிய கேள்விக்கு பதலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போதைக்கு எமக்கு டீசலில் எந்தவொரு குறைவும் இல்லை. பெற்றோல் மாத்திரமே எமக்கு போதாமல் உள்ளது. எனினும் நாம் சாதாரண தரகின் அடிப்படையிலேயே எரிபொருளை கொண்டு வருகின்றோம். இந்த பிரச்சினைக்கு தரமில்லாத எரிபொருள் வந்தமையே பிரதான காரணமாகும். எனினும் அந்த கப்பலை நாம் திருப்பி அனுப்பி விட்டோம். என்றாலும் இன்று வரை குறித்த கப்பல் திருகோணமலையில் தரித்து வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் வியாழக்கிழமை பிரச்சினைகள் தீர்த்து சாதாரண நிலைமைக்கு கொண்டு வர முடியும். ஏற்கனவே இன்று புதன்கிழமை இரவு 11க்கு வர கூடியதாக இருந்த கப்பல் 9 மணிக்கு வரவிருப்பதாக எமது செய்மதி தகவல் தெரிவிக்கின்றன.
அத்துடன் தற்போது எமக்கு சந்தேகம் ஒன்று உள்ளது. சாதாரணமாக பெற்றோல் விநியோகம் நடந்து கொண்டிருந்தது. எனினும் திடீரென வந்த குறுந்தகவலை அடுத்தே நாட்டு மக்கள் பதற்றமடைந்தனர். அத்துடன் அந்த தகவல் வந்ததை அடுத்து எமது கணிணி கட்டமைப்புகள் இயங்கவில்லை. எமது சுத்திகரிப்பு நிலையத்தில் மின் துண்டிப்பு கோளாறும் ஏற்பட்டது. விநியோகிப்பதற்கு பெற்றோல் இருந்தும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோகம் செய்யாமல் இருந்தமை போன்ற சிக்கலான பிரச்சினைகள் எமக்கு சந்தேகத்தை ஏற்பட்டுத்தியுள்ளன. எவ்வாறாயினும் இது தொடர்பாக நாம் விசாரணை செய்யவுள்ளோம்.
இந்த நிலைமைக்கு நாட்டை கொண்டு வந்தமைக்கு காரணமானவர்களை இனங்காணும் வகையில் விசாரணையை ஆரம்பிக்கவுள்ளோம். இந்த விசாரணையின் போது நான் முன்னின்று செயற்படுவேன். இதன்படி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவோம் .
எமது நாட்டை பொறுத்தவரையில் 90 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் மாத்திரமே களஞ்சியப்படுத்த முடியும். இது நான் அமைச்சராக பதவியேற்க முன்பு இருந்த நிலைமைதான். அதுவே இன்னும் உள்ளது. இதன்பிரகாரம் பெற்றோலிய கூட்டுதாபனத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து முன்செல்ல வேண்டும்.
அத்துடன் நாம் சாதாரணமாக ஒரு நாளைக்கு 2,500 மெட்ரிக் தொன் பெற்றோலையே விநியோகம் செய்கின்றோம். எனினும் ஞாயிற்று கிழமை விநியோகம் செய்வதில்லை. கடந்த சனிக்கிழமை 2,800 மெட்ரிக் தொன் பெற்றோல் விநியோகம் செய்துள்ளோம். பொதுவாக ஞாயிற்றுகிழமைகளில் விநியோகம் செய்யாவிடினும் கடந்த ஞாயிற்றுக் கிழமை 963 மெட்ரிக் தொன் பெற்றோல் விநியோகம் செய்துள்ளோம். நேற்று முன் தினம் 2,966 மெட்ரிக் தொன் விநியோகம் செய்தோம். நேற்றைய தினம் 3,000 மெட்ரிக் தொன் பெற்றோல் விநியோகம் செய்துள்ளோம். வியாழக்கிழமை சாதாரண நிலைமைக்கு நாடு திரும்பும்.
இருந்த போதிலும் வேறு காலங்களில் 2,500 மெட்ரிக் தொன் கோரிக்கை இருந்தாலும் தற்போது மக்கள் பதற்றமடைந்தமையை அடுத்து 4,700 மெட்ரிக் தொன் பெற்றோல் கோரிக்கை எழும்பியுள்ளது.
தரமில்லாத பெற்றோலை எவர் கூறினாலும் நான் அமைச்சராக இருக்கும் வரை கப்பலில் இருந்து இறக்க மாட்டேன். என்னை வீட்டு அனுப்பினாலும் நாட்டுக்கு தீங்கானதை நான் செய்ய மாட்டேன். அத்துடன் பிரச்சினை விடயத்தில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எனக்கு அழுத்தம் பிரயோகம் செய்யவில்லை. மேலும் இந்த பிரச்சினையை ஒரு சிலர் அரசியலாக்க முயற்சின்றனர். தயவு செய்து இந்த பிரச்சினையை தீர்க்க எனக்கு இடமளியுங்கள் .
Post a Comment