
தாயகத்தில் தற்போதுள்ள அரசியல் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தும் நோக்குடன் அதனுடன் இணைந்து போட்டியிடவுள்ளோம் என்று ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்தது.
தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் சார்பில் கலந்துகொண்ட வேந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-:
நடைபெறவுள்ள தேர்தல் தேசியத்தைப் பெறுவதற்கானது அல்ல. அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட தேர்தல். இந்தத் தேர்தலில் பல குழுக்களாகப் பிரிந்து நின்று போட்டியிட்டு தாயகத்தைப் பிளவுடுத்தக் கூடாது. அதற்காகவே நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுகின்றோம். ஆயுதப் போராட்டத்தின்போது தமிழ் மக்களாகப் பலம் பொருந்தியிருந்தோம். அவ்வாறான நிலைமை இப்போது இல்லை. அரசியல் பலம் மாத்திரமே உள்ளது.
அரசியலில் நாம் பிரிந்து நிற்காது தேசிய பலத்தை பன்னாடுகளுக்கும், இலங்கை அரசுக்கும் காட்ட வேண்டும். அதன் ஊடாக நாம் பேரம் பேசும் சக்தியாக உருவாக முடியும். தற்போது தமிழ்க் கூட்டமைப்பில் இணைந்துள்ளோம். கூட்டமைப்பில் எவர் பிழை செய்தாலும் தட்டிக் கேட்போம் – என்றார்.
Post a Comment