இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.இந்த நில நடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், “இந்தோனேசியாவின் ஜாவா தீவில் வெள்ளிக்கிழமை இரவு 11. 47 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவாகியது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் 90 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இது 30 வினாடிள் நீடித்தது” என்று கூறியுள்ளது.
கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஜாவாவின் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் திரும்ப பெறப்பட்டது.
இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்ததில் 62 வயது முதியவரும், 80 வயது மூதாட்டியும் மரணம் அடைந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
மேற்கு ஜாவா தீவுக்கு அருகிலுள்ள தாசிக்மலயா, பன்கண்டரன் மற்றும் சியாமிஸ் ஆகிய பகுதிகளில் அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 40 வீடுகள், மருத்துவமனைகள், அரசு அலுவலங்கள் சேதமடைந்துள்ளன” என்றார்.
கடந்த ஆண்டும் டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 100 பேர் பலியாகினர்.
Post a Comment