யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் நேற்றுக் கையளித்தார்.வடக்கில் உள்ள ஒரே ஒரு மாநகர சபையான யாழ்ப்பாணம் மாநகர சபையின் தலைவர் பதவி இராஜதந்திர மதிப்புள்ள ஒரு பதவி. யாழ். மாவட்டத்தின் அடை யாளமாகவும் விளங்கக்கூடியது. இத்தகைய பெருமை மிகு பதவியை அடைவதற்கான முயற்சியில் பலரும் போட்டியிட்டு வந்தனர்.
தமிழ் அரசுக் கட்சிக்குள்ளும் பலத்த போட்டி நிலவியது. யாழ்ப்பாணம் வணிகர் கழக முன்னாள் தலைவரும் தற்போது மாகாண சபை உறுப்பினராக உள்ளவருமான இ.ஜெயசேகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ.சிறில், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் இராஜகுருதேவன், ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் ஆகியோர் இந்தப் போட்டியில் இருந்தனர்.
எனினும் யாழ். மாநகர சபைக்குள் வாழக்கூடிய மக்களின் பகுப்பாய்வு அடிப்படையில் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ். மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக வடக்கு மாகாண உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஆர்னோல்ட் நேற்று இரவு கையளித்தார்.
Post a Comment