Ads (728x90)

கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர் புல்வாமா பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்.இ.முகமது என்ற அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த தேசத்தை மட்டுமின்றி, உலகத்தை அதிரவைத்த இந்த தாக்குதல் இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகவே கருதப்பட்டது.

தீவிரவாதத்திற்கு எதிரான எங்கள் வீரர்கள் தியாகத்தை எப்போதும் வீண்போக விடமாட்டோம். எங்கள் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் எதிரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டுமென புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிரதமர் மோடி எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்திய விமானப்படையின் 12 மிராஷ் ஜெட் விமானங்கள், தீவிரவாத முகாம்கள் மீது 1000 கிலோ எடையுள்ள குண்டுகளை வீசி அழித்துள்ளது.

பாலாகோட், சாக்கோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இருந்த தீவிரவாத முகாம்களை விமானப்படை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் ஜெய்ஷ்.இ.முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை இந்திய வெளியுறவு செயலர் விஜய் கோகலேவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதலால் அதிர்ச்சியடைந்துள்ள பாகிஸ்தான் தரப்பு தங்கள் நாட்டு பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தியது. அதன் பின்னர் பாகிஸ்தான் இராணுவத்தினரை எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருக்கும்படியும், இந்தியாவுக்கு பதிலடி தருவதற்கு நேரமும், இடமும் முடிவு செய்யப்படும் எனவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget