தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையே அமைச்சர் மங்கள சமரவீரவின் ஏற்பாட்டில் அவரது இல்லத்தில் நேற்று இரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள சஜித் பிரேமதாச பல்வேறு தரப்புக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
இதேவேளை உடனடியாக பிரதமர் பதவியை ஏற்பதன் மூலம் கட்சி தலைமையையும் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாமென்ற, ஐ.தே.கவின் சில மூத்த தலைவர்களின் ஆலோசனையையும் தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.
இந்த இரண்டு விவகாரங்களையும் முன்னிறுத்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. இங்கு ஜனாதிபதி தேர்தலில் தன்னை முழுமையாக ஆதரிக்கும்படி சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்திருந்தார்.
அதிகாரத்திற்கு வந்ததும், ஆறு மாதத்தில் பிரச்சனையை தீர்ப்பது என்ற இலக்குடன் செயற்பட்டு, இறுதி இலக்கொன்றை அடையலாமென சஜித் தெரிவித்தார்.
ரணில் வேட்பாளராகினால் தேர்தல் வெற்றி சாத்தியமில்லை என்பதை குறிப்பிட்ட மங்கள, சஜித் அதிகாரத்திற்கு வந்தால் அரசியல் தீர்விற்கான உத்தரவாதத்தை தானும் தருவதாக குறிப்பிட்டார்.
நீண்ட கலந்துரையாடலின் பின்னர் இரண்டு தரப்பிற்குமிடையில் கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் சந்தித்து பேசுவதென இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
தமிழ் அரசு கட்சி சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், ஐ.தே.கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாசவுடன் மங்கள சமரவீரவும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment