Ads (728x90)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது. இச்சந்திப்பில் புதிய அரசியலமைப்பை உருவாக்கி ஒரு வருடத்தில் இனப்பிரச்சினையை தீர்ப்பேன் என இதன்போது கூட்டமைப்பினரிடம், ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதியளித்துள்ளார்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இழுபடுகின்றன. கடந்த ஐந்து வருடத்தில் அது தீர்க்கப்படவில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலும் வந்து விட்டது.

மேலும் உங்கள் கட்சியிலேயே இன்னும் ஒற்றுமை ஏற்படவில்லை. உங்கள் கட்சியிலிருந்தே மூன்று வேட்பாளர்கள் எங்களுடன் கதைத்து விட்டார்கள். முதலில் யார் வேட்பாளர் என்பதை நீங்கள் தீர்மானியுங்கள்.

நாம் அனைத்து வேட்பாளர்களுடனும் பேச்சு நடத்துவோம். தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையை தீர்க்க அதிகபட்ச தீர்வு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக யார் நம்பிக்கையளிக்கிறார்களோ அவர்களிற்கே எமது ஆதரவு இருக்கும். அதற்காக அனைவருடனும் பேசிய பின்னரே தீர்மானம் எடுப்போம் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்த வருடத்தில் தமது அரசினால் முன்னகர்த்தப்பட்ட விடயங்களை ரணில் சுருக்கமாக குறிப்பிட்டார். அரசியல் தீர்விற்காக புதிய அரசியலமைப்பு வரைபு உருவாக்கப்பட்டது. அபிவிருத்தியில் கூட்டமைப்பு பங்காளியாகியது உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி, அது எதிர்காலத்திலும் தொடரும் என்றார்.

தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினால் அடுத்த ஒரு வருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகளை முடித்து, இனப்பிரச்சனையை தீர்ப்பேன் என ரணில் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதேவேளை கல்முனை விவகாரத்தில் வாக்களித்தபடி ரணில் நடந்து கொள்ளவில்லையென்பதை கூட்டமைப்பு எம்.பிக்கள் சுட்டிக்காட்டினர். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து, பூர்வீகமாக குடியிருக்கும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளிற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள். இதற்கு ரணிலும் துணையாக இருக்கிறார் என கூட்டமைப்பு எம்.பிக்கள் குற்றம் சுமத்தினர்.

இக்குற்றச்சாட்டை மறுத்த ரணில், எல்லை மீள்நிர்ணய பணிகள் நடந்து வருவதாகவும், கல்முனையை தரமுயர்த்தும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படுவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருவதாகவும் கல்முனை விரைவில் தரமுயரும் எனவும் மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளார். 



Post a Comment

Recent News

Recent Posts Widget